அரசு பள்ளியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து இளைஞர்– மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

அரசு பள்ளியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கண்டித்து திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இளைஞர்–மாணவர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-07 22:45 GMT

திருவாரூர்,

அரசு பள்ளியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசு பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர், பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு தொடக்கப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை உடனடியாக தொடங்க வேண்டும். அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர்–மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் முன்பு அனைத்திந்திய இளைஞர்–மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் பெருமன்ற மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துரை.அருள்ராஜன் முன்னிலை வகித்தார். மாணவர் பெருமன்ற மாநில தலைவர் குணசேகர், இளைஞர் பெருமன்ற தேசியக்குழு உறுப்பினர் முருகேசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் மாணவர் பெருமன்ற மாவட்ட தலைவர் வீரபாண்டியன், நிர்வாகிகள் சரவணன், நல்லசுகம், சரவணன், கார்த்தி, பாப்பையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகளை தொடங்கி மாணவர் சேர்க்கை இடங்களையும் அதிகப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைகளை தடையின்றி வழங்கிட வேண்டும். அரசு பள்ளியை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்