எருமப்பட்டி அருகே தாய், மகன் மர்ம சாவு போலீசார் விசாரணை

எருமப்பட்டி அருகே வீட்டில் வெட்டுக் காயங்களுடன் கிடந்த தாயும், மகனும் இறந்தனர். அவர்களது சாவில் மர்மம் நிலவுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-09 22:15 GMT
எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள வரவூர் ஊராட்சி மாணிக்கவேலூர் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகன் சுரே‌‌ஷ் (வயது 25). இவரது மனைவி கவுரி (22). இவர்களுக்கு புகழ்வின் என்று 1½ வயது மகன் இருந்தான். இவர்கள் மாணிக்கவேலூரில் உள்ள காட்டுப்பகுதியில் தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வீட்டில் சுரே‌‌ஷ், மனைவி கவுரி மற்றும் புகழ்வின் ஆகியோர் உடலில் வெட்டு காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இதையறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே கவுரி, குழந்தை புகழ்வின் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். சுரேசுக்கு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காட்டுப்பகுதியில் அவர்கள் இருந்ததால் உடனடியாக சம்பவம் குறித்து யாருக்கும் தெரியவில்லை. தாய், மகன் சாவில் மர்மம் நிலவுகிறது.

இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்விரோதத்தில் தாய், மகனை யாரும் கொலை செய்தார்களா? அல்லது அவர்களது சாவுக்கு வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எருமப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்