நாகையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

நாகையில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுரேஷ்குமார் வழங்கினார்.

Update: 2019-06-10 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வாராந்திர சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 218 மனுக்கள் பெறப்பட்டன. அவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஒருவாரத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு உரிய முடிவை மனுதாரர்களுக்கு அறிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

நலத்திட்ட உதவிகள்

இதனை தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 17 பயனாளிகளுக்கு இலவச பஸ் பயண அட்டையும், 25 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 85 ஆயிரத்து 700 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், தாட்கோ நிறுவனம் சார்பில் 3 பயனாளிக்கு ரூ.19 லட்சத்து 5 ஆயிரத்து 199 மதிப்பிலான வாகனங்களையும், சமூக பாதுகாப்புத்திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகைக்கான ஆணைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

இதில் தனித்துணை கலெக்டர் (சமூகப்பாதுகாப்பு திட்டம்) வேலுமணி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்