இரட்டை கொலை: மனைவி, குழந்தையை கழுத்தை அறுத்து கொன்றது ஏன்? கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்

எருமப்பட்டி அருகே மனைவி, 1½ வயது குழந்தையை கழுத்தறுத்து கொன்றது குறித்து அவரது கணவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

Update: 2019-06-11 22:15 GMT
எருமப்பட்டி,

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே மாணிக்கவேலூரை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 25), லாரி டிரைவர். எருமப்பட்டியை அடுத்த கஸ்தூரிப்பட்டியை சேர்ந்த கவுரி(20) என்ற பெண்ணை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் அவர் கவுரியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1½ வயதில் புகழ்வின் என்ற ஆண் குழந்தை இருந்தது.

கடந்த 9-ந்் தேதியன்று சுரேஷின் தோட்டத்தில் கவுரியும், புகழ்வினும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டும், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுரேஷ் உயிருக்கு போராடி கொண்டும் இருந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார்் உயிருக்கு போராடிய சுரேசை மீட்டு உடனடியாக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த கொடூர இரட்டை கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த எருமப்பட்டி போலீசார் சுரேஷ், கவுரியின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

கணவரிடம் விசாரணை

அப்போது மாணிக்கவேலூர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் வீரக்குமார் (25) என்பவர் சுரேசுக்கு நண்பராக இருந்து வந்துள்ளார். கவுரியும், வீரக்குமாரும் சகஜமாக பேசி பழகியுள்ளனர். இந்நிலையில் கொலை சம்பவம் நடப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு சுரேஷ் வீட்டில் இல்லாத போது கவுரியை சந்திக்க வீரக்குமார் சென்றதாக சுரேசுக்கு தகவல் கிடைத்தது.

இதனை அறிந்த போலீசார் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷிடம் விசாரணை மேற்கொண்டனர். கழுத்தில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டதால் அவர் தற்போது பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வாக்குமூலம்

இதையடுத்து அவர் தனது வாக்குமூலத்தை கைப்பட எழுதி போலீசாரிடம் கொடுத்தார். வாக்குமூலத்தில், எனது நண்பரான வீரக்்குமார் எனது மனைவியிடம் பேசி வந்தது எனக்கு பிடிக்கவில்லை. இதனை கடந்த 9-ந் தேதியன்று எனது மனைவியிடம் கூறினேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனம் உடைந்த எனது மனைவி மாலையில் தோட்டத்திற்கு செல்வதற்கு முன் வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். தோட்டத்திற்கு வந்த பிறகு கீழே விழுந்து மயக்க நிலையில் இருந்த அவரை பார்க்க முடியாமல் காப்பாற்றாமல் கழுத்தை அறுத்து கொலை செய்தேன்.

குழந்தை கழுத்தையும் அறுத்தேன்

பிறகு நானும் தற்கொலை செய்ய முயன்றபோது எனது மகனை அனாதையாக விட்டு செல்ல மனம் இல்லாமல் அவனையும் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். இதையடுத்து மின்சாரம் வைத்து எனக்கு நானே தற்கொலைக்கு முயன்றேன். அதன் பிறகு எனது கழுத்தை நானே அறுத்து கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால், மனைவி விஷம் குடித்தது தெரிந்தும் காப்பாற்றாமல் கொலை செய்துவிட்டு பெற்ற குழந்தையையும் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக சுரேஷ் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்