கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளரின் கார், ஆட்டோவுக்கு தீவைப்பு; 4 பேரை உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி

கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளருக்கு சொந்தமான கார், ஆட்டோ தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் அவரது தம்பி உள்பட 4 பேரை உயிரோடு எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-06-11 22:45 GMT

கோட்டக்குப்பம்,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகர அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் கணேசன் (வயது 45). இவருடைய வீடு சின்ன முதலியார்சாவடியில் உள்ளது.

கணேசனின் தம்பி அசோகன். இவருடைய மகன் சிவாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவாவும் சதீசும் மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். இதில் தலையிட்டு அ.தி.மு.க. செயலாளர் கணேசன் சமரசம் செய்தார். ஆனாலும் சதீஷ் ஆத்திரத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மாலை சதீஷ் அவருடைய நண்பர்கள் எழில், சரவணன் ஆகியோர் சிவாவை தாக்கினார்கள்.

இந்தநிலையில் நள்ளிரவு நேரத்தில் சதீஷ் தலைமையில் ஒரு கும்பல் அசோகனின் உறவினர் பாலா என்பவரின் ஆட்டோவுக்கு தீ வைத்தது. இதில் அந்த ஆட்டோ எரிந்து சேதமடைந்தது.

இதன்பின் வீடு புகுந்து அசோகன், அவருடைய தம்பி மோகன், நண்பர்கள் கோபால், ஏழுமலை ஆகியோர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைக்க முயன்றனர். ஆனால் உஷாரான அவர்கள் 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதன்பிறகும் ஆத்திரம் தீராத சதீஷ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அ.தி.மு.க. செயலாளர் கணேசன் வீட்டுக்கு சென்றனர். அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் அந்த கார் தீப்பிடித்து எரிந்தது. அதில் இருந்து புகை மூட்டம் கிளம்பியதால் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கணேசன், அவருடைய மனைவி சாந்தா, மகன்கள் சந்துரு, ஹரி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெளியே ஓடிவந்தனர்.

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் கணேசனின் ஆதரவாளர்கள் அங்கு திரண்டு வந்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரும் அங்கு வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோட்டக்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி 4 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். அடுத்தடுத்து நடந்த தீ வைப்பு சம்பவங்களால் சின்ன முதலியார்சாவடியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பாதுகாப்புக்காக போலீசார் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.

தீவைத்து எரிப்பு சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சக்கரபாணி எம்.எல்.ஏ., வானூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஷ்குமார், காட்ராம்பாக்கம் கூட்டுறவு வங்கி தலைவர் வீரப்பன் மற்றும் அ.தி.மு.க.வினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க போலீசாரிடம் சக்கரபாணி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்