குத்தகை வசூல் ஏலத்தை நடத்தக்கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

அம்மாபட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவிலில் குத்தகை வசூல் ஏலத்தை நடத்தக்கோரி பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

Update: 2019-06-12 22:30 GMT
சேலம், 

சேலம் அம்மாபேட்டையில் செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கடைகளுக்கு ஆண்டுக்கு ஒருமுறை குத்தகை வசூலிக்க ஏலம் விடப்படும். 2018-19-ம் ஆண்டுக்கு பொது ஏலமாக மாநகராட்சி மூலம் விடப்படது. அப்போது மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஏலம் எடுத்தனர்.

இந்தநிலையில் இந்தாண்டுக்கான குத்தகை வசூல் ஏலத்தை விரைவில் நடத்தக்கோரி நேற்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவிலில் திடீரென உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, ‘2018-19-ம் ஆண்டு மாற்று சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ரூ.3 லட்சத்து 51 ஆயிரத்துக்கு குத்தகை ஏலம் விடப்பட்டது. தற்போது இந்த குத்தகை ஏலத்தின் காலம் முடிவடைந்தது. இதனால் குத்தகை ஏலத்தை விரைவில் நடத்தி, இதை சம்பந்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு விட வேண்டும்’ என்றனர்.

இதையடுத்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தியவர்களிடம் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அம்மாபேட்டை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் கலந்து ஆலோசித்து குத்தகை ஏலம் இந்த வாரத்தில் நடத்தவும், இதில் பழைய நடைமுறையை பின்பற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செயல் அலுவலர் உறுதியளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்