சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்

சிவகங்கை அருகே மயில்களை வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-06-12 22:45 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை நிறுத்தியபோது அவர், வேகமாக தப்பிச் சென்றார். பின்னர் அவரை துரத்திய போது அரண்மனைசிறுவயல் என்ற இடத்தில் தனது மோட்டார் சைக்கிள் மற்றும் அதில் இருந்த பையை விட்டு விட்டு தப்பியோடினார்.

இதையடுத்து வனத்துறையினர் அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து அந்த பையை திறந்து பார்த்தனர். இதில் 6 மயில்கள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து வனச்சரக அலுவலர் கோபிநாத் தலைமையில் வனவர்கள் செல்லமணி, திருப்பதிராஜா, வனக்காப்பாளர்கள் மலைச்சாமி, தங்கசாமி, முருகேசன், வன காவலர் சந்திரபோஸ் ஆகியோர் தப்பியோடிய அந்த நபரை தேடினர். அப்போது அவர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே வேலாயுதம்பட்டி வனத்துறையினரிடம் சிக்கினார். அவரை பிடித்து விசாரித்த போது அவர் அந்த பகுதியைச் சேர்ந்த விஜயக்குமார்(வயது26) என்பது தெரிய வந்தது.

மேலும் அவர் இறைச்சிக்காக மயிலை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை வனத்துறையினர் கைது செய்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்