குமரியில் கடல் சீற்றம்; வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு

குமரி மாவட்டத்தில் தொடர் கடல் சீற்றம் காரணமாக வள்ளவிளை மீனவ கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் கடல் நீர் புகுந்தது. கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

Update: 2019-06-12 23:15 GMT
கொல்லங்கோடு,

அரபிக்கடலில் புயல் உருவானதை தொடர்ந்து குமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடல் சீற்றமாக உள்ளது. தொடரும் கடல் சீற்றத்தால் பல இடங்களில் அலை தடுப்பு சுவர் சேதமடைந்தது.கடந்த 10-ந் தேதி நீரோடி காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மீன் விற்பனை செய்யும் காங்கிரீட் தரைதளம் இடிந்து சேதமடைந்தது. தற்போது அந்த பகுதி முழுமையாக ராட்சத அலையில் அடித்துச் செல்லப்பட்டு அப்பகுதி சாலையும் துண்டிக்கப்படும் நிலையில் உள்ளது.

கடல் சீற்றம் அதிகமாக இருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் இரவு கடல் அரிப்பை தடுக்க சுமார் 1,000 மணல் மூடைகளை அடுக்கி வைத்தனர். ஆனாலும், ஆக்ரோ‌‌ஷத்துடன் ராட்சத அலைகள் எழுந்து வருவதால், மீனவர்கள் வைத்த மணல் மூடைகளையும் கடல்நீர் அடித்து சென்றபடி உள்ளது.

இந்தநிலையில் நேற்று 10 அடி முதல் 15 அடி உயர ராட்சத அலைகள் எழுந்து வந்ததால் அலை தடுப்பு சுவரையும் தாண்டி வள்ளவிளை மீனவ கிராமத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் கடல் நீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் உள்ள மீனவர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பாக அருகில் உள்ள உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதற்கிடையே கடற்கரையோர வீடு இடிந்து விழுந்து ஒருவர் காயம் அடைந்துள்ளார். அதாவது, நீரோடி காலனி பகுதியை சேர்ந்த மீனவர் பெனடிக்ட்டிற்கு (வயது 55) சொந்தமான வீடு கடற்கரையை ஒட்டிய பகுதியில் உள்ளது. தற்போது, ஏற்பட்ட சீற்றம் காரணமாக அவரது வீடு இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதனால் அவர் அருகில் உள்ள அவரது மகளின் வீட்டில் தங்கியிருந்தார்.இந்த நிலையில் நேற்று மாலை பெனடிக்ட் தனது வீட்டில் வைத்திருந்த மீன்பிடி உபகரணங்களை எடுக்க சென்றார். அப்போது, திடீரென வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் பெனடிக்ட் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.

இதேபோல் கன்னியாகுமரியிலும் அதிகாலையில் இருந்தே கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், முக்கடல் சங்கம கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தொடரும் சீற்றத்தால் கன்னியாகுமரி, வாவத்துறை, கோவளம், ஆரோக்கியபுரம், கீழ மணக்குடி, ராஜாக்கமங்கலம் துறை உள்ளிட்ட கடற்கரை கிராமங்களில் வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை. விவேகானந்தர் மண்டபத்துக்கு வழக்கம்போல் படகு போக்குவரத்து இயக்கப்பட்டது.

மேலும் செய்திகள்