பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய நடவடிக்கை - கலெக்டர் தகவல்

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2019-06-12 22:15 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களது 10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்த வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை எண், ஆதார் அட்டை எண், குடும்ப அடையாள அட்டை எண், கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகிய விவரங்களுடன் மதிப்பெண் சான்று வழங்கப்படும் நாளன்று அவரவர் பள்ளிக்கு எடுத்து செல்ல வேண்டும்.

10-ம் வகுப்பு கல்வித்தகுதியை பதிவு செய்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் தெரியவில்லை என்றால், வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகி பெற்றுக்கொள்ளலாம். கடந்த 3-ந்தேதி தொடங்கிய வேலைவாய்ப்பு பதிவு பணி வருகிற 17-ந்தேதி வரை அந்தந்த பள்ளிகளிலேயே நடைபெறும். பதிவுப்பணி நடைபெறும் 15 நாட்களுக்கும் மதிப்பெண் சான்று வழங்க தொடங்கிய முதல் நாளைய பதிவு மூப்பு தேதியாக வழங்கப்படும்.

மேலும் http://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaipuu.gov.in என்ற வேலைவாய்ப்புத்துறை இணைய தளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பு பதிவு செய்ய விரும்பும் அனைத்து மாணவர்களும் தவறாது இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்