பண்ருட்டியில், ரத்தக்காயங்களுடன் கிடந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி சாவு

பண்ருட்டியில் வீட்டின் உள்ளே ரத்தக்காயங்களுடன் கிடந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2019-06-12 21:30 GMT
பண்ருட்டி,

பண்ருட்டி காமராஜர் நகர் போலீஸ் லைன் பகுதியை சேர்ந்தவர் பட்டுசாமி மனைவி சரசு(வயது 61). சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் தலையில் ரத்தக்காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். அவருக்கு அருகில் ரத்தக்கறை படிந்த இரும்பு கம்பி ஒன்றும் கிடந்தது.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

சரசுவை மர்மநபர்கள் யாரேனும் தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றிருக்கலாம் என்று உறவினர்கள் பண்ருட்டி போலீசில் தெரிவித்தனர். ஆனால் போலீஸ் விசாரணையில், சரசு அணிந்திருந்த நகைகள் அவருடைய வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் ரத்தக்காயங்களுடன் கிடந்ததற்கான காரணம் குறித்து தெரியவில்லை. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரசு, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து இந்த வழக்கை மர்மசாவு என்று மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்