விக்கிரவாண்டி அருகே, பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்த நெல் வியாபாரி - போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் நெல் வியாபாரி பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-13 21:45 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி பழைய தபால் நிலைய தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 40), நெல் வியாபாரி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினரிடம் கோபித்துக்கொண்டு முண்டியம்பாக்கம் சாஸ்தா தெருவிற்கு வந்து அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவர் தங்கியிருந்த வீடு உள்பக்கமாக பூட்டிய நிலையிலேயே இருந்தது. இதனால் சந்தேகமடைந்து அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் விக்கிரவாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டினுள் படுத்த படுக்கையில் ராஜ்குமார் பிணமாக கிடந்தார். தொடர்ந்து, அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, ராஜ்குமார் எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்