4 பேர் பணியிடைநீக்கம் எதிரொலி: கரூர் அரசு மருத்துவமனையில் நர்சுகள் தொடர் போராட்டம்

கரூர் அரசு மருத்துவமனையில் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நர்சுகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-13 23:00 GMT
கரூர்,

கரூரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 100-க்கும் மேற்பட்ட நர்சுகள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு, நர்சுஅல்லாதோருக்கான பணியையும் சேர்த்து வழங்கி வேலைப்பளுவை அதிகரிப்பதாகவும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த 5-ந்தேதி கரூர் அரசு மருத்துவமனையில் வேலை நிறுத்த போராட்டத்தில், ஈடுபட்டனர். இது தொடர்பாக மேற்கொண்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து 10-ந் தேதி முதல் கரூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நர்சுகள் ஒன்று கூடி திடீரென தர்ணா போராட்டம் தொடங்கினர். இந்த போராட்டம் நேற்றும் 4-வது நாளாக தொடர்ந்து நடை பெற்றது. அப்போது நர்சுகளின் பணியிடை நீக்கத்துக்கான உத்தரவை திரும்பபெற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு அனைத்து மருந்தாளுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் சண்முகம், மாநில தணிக்கையாளர் பசுபதி, மாநில தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் இளங்கோ, மாநில அரசு ஊழியர் சங்க துணைத்தலைவர் சுப்பிரமணியம், கரூர் மாவட்ட அரசு பணியாளர் சங்க தலைவர் மகாவிஷ்ணு, நிர்வாகிகள் அறிவழகன், பொன்ஜெயராமன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்