கிழக்கு கடற்கரையில் தடைகாலம் இன்று நிறைவடைகிறது: மீன்பிடிக்க தயாராகும் விசைப்படகு மீனவர்கள்

கிழக்கு கடற்கரையில் தடைகாலம் இன்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைவதை தொடர்ந்து சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தயாராகி வருகிறார்கள்.

Update: 2019-06-13 22:45 GMT
கன்னியாகுமரி,

தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் மீன்கள் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் வகையிலும் கிழக்கு கடற்கரையில் உள்ள கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரை ஒவ்வொரு ஆண்டும் விசைப்படகு மீனவர்களுக்கு ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை தடைகாலமாக அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி தடைகாலம் அறிவிக்கப்பட்டது. சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள். தடைகாலத்தை யொட்டி இந்த விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதனால், மீனவர்கள் தங்கள் படகுகளை கரையில் ஏற்றி அவற்றை பழுது பார்த்தல், வலைகளை சீரமைத்தல் ஆகிய பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இன்று நிறைவடைகிறது

இந்தநிலையில் மீன்பிடி தடைகாலம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. அதைத்தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) அதிகாலையில் சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்ல உள்ளனர்.

தடைகாலம் நிறைவடைவதை தொடர்ந்து மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளை மீண்டும் கடலில் இறக்கி மீன்பிடிக்க செல்ல முன்னேற்பாடு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்