61 நாள் தடைக்காலம் முடிந்து விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன

ராமேசுவரத்தில் 61 நாள் தடைக்காலம் முடிந்து நேற்று மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர்.

Update: 2019-06-14 22:45 GMT
ராமேசுவரம்,

ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் ஜூன் மாதம் 14-ந்தேதி வரை மீன்கள் இனப்பெருக்கத்துக்காக விசைப்படகுகளில் மீனவர்கள் 61 நாட்கள் மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த நாட்களில் கடலுக்கு செல்ல விசைப்படகுகளுக்கு டோக்கன் வழங்கப்பட மாட்டாது. எனவே மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

நேற்று இரவு 12 மணியுடன் இந்த தடைக்காலம் முடிவுற்றது. இன்று(சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்கு மீன் பிடிக்க டோக்கன் வழங்கப்பட இருந்தது. இந்த நிலையில் டோக்கன் பெறாமலேயே நேற்று மாலை சுமார் 650 விசைப்படகுகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். 2 மாதத்திற்குபின் சென்றதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு மீனவர்கள் சென்றுள்ளனர். நாளை (ஞாயிற்றுக் கிழமை) கரை திரும்புவார்கள்.

முன்னதாக படகுகள் புறப்படும்போது இலங்கை கடற்படை தொல்லையில்லாமல் மீன்பிடித்து வர வேண்டும் என மீனவர்கள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இந்திய கடல் எல்லையை தாண்டி செல்லக்கூடாது, ஒவ்வொரு படகிலும் உரிய ஆவணம், மீனவர்களின் அடையாள அட்டை ஆகியவை வைத்திருக்க வேண்டும் என்று மீன்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேலும் செய்திகள்