சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 மகள்களுடன் வந்த பெண் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு 3 மகள்களுடன் வந்த பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-14 22:00 GMT
சேலம், 

சேலம் மூலப்பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா(வயது 39). இவர் நேற்று தனது தாய் சண்முகவள்ளி, மகள்கள் பூஜா, கிருத்திகா, சுபா ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது புஷ்பா தான் மறைத்து வைத்திருந்த கேனில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்ற முயன்றார்.

இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்ததுடன் தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். மேலும் அவர் அங்கு திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தனர்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் புஷ்பா கூறும் போது, ‘எனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் சேர்ந்து வசித்து வருகிறார். இதனால் தற்போது எங்களை பராமரிக்க யாரும் இல்லை.

வாடகை வீட்டில் வசித்து வந்த நாங்கள் தற்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்