உளுந்தூர்பேட்டை அருகே, மொபட் மீது கார் மோதல்- தொழிலாளி உள்பட 2 பேர் சாவு

உளுந்தூர்பேட்டை அருகே மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது நடந்த இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-06-14 22:15 GMT
உளுந்தூர்பேட்டை, 

உளுந்தூர்பேட்டை கீரனூர் காலனியை சேர்ந்தவர் மொன்னையன் (வயது 50). தொழிலாளி. இவர் தனது மனைவி கொளஞ்சியம்மாள்(40) மற்றும் உறவினரான கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை(48) ஆகியோருடன் பண்ருட்டி அடுத்த பட்டாம்பாக்கத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு செல்ல முடிவு செய்தார்.

அதன்படி 3 பேரும் ஒரு மொபட்டில் உளுந்தூர்பேட்டையில் இருந்து பட்டாம்பாக்கத்துக்கு புறப்பட்டனர். மொபட்டை மொன்னையன் ஓட்டினார். உளுந்தூர்பேட்டையை அடுத்த கெடிலம் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரத்தில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற கார் ஒன்று மொபட் மீது மோதியது.

இதில் மொன்னையன் உள்பட 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மொன்னையன், அண்ணாமலை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கொளஞ்சியம்மாள் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்றபோது மொபட் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்