குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை மன்னார்குடியில் பரபரப்பு

குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-15 22:15 GMT
மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம் பெரியகொத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட அன்னஞ்சி கிராமத்தில் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால், ஆழ்துளை கிணற்றில் இருந்து மின் மோட்டார் மூலமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நிரப்ப முடியவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாக கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள். குடிநீர் வினியோகம் சீராக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

முற்றுகை போராட்டம்

இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் மன்னார்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினார்.

பெண்களின் திடீர் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி கலைச்செல்வன் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் விரைவில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்