மீன்பிடி தடைக்காலம் முடிந்தது: தஞ்சை மாவட்டத்தில் 78 படகுகள் கடலுக்கு சென்றன

மீன்பிடி தடைக்காலம் முடிந்ததால் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 78 படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றன.

Update: 2019-06-15 22:45 GMT
சேதுபாவாசத்திரம்,

மீன்களின் இனப்பெருக்கத்துக்காக தமிழக கடலோர பகுதியில் அமல்படுத்தப்பட்டிருந்த மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்தது. மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லமாட்டார்கள். நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவார்கள். தஞ்சை மாவட்ட கடலோர பகுதியில் மீனவர்களின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி திங்கள், புதன், சனி ஆகிய கிழமைகளில் தான் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும். பிற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்வார்கள். மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததையொட்டி தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மல்லிப்பட்டிணம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 248 விசைப்படகுகள் இருந்த நிலையில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலில் விசைப்படகுகள் சேதமடைந்தன. மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் 57 படகுகளும், சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து 58 படகுகளும் என மொத்தம் 115 படகுகள் மட்டுமே தற்போது உள்ளன. இதில் சேதுபாவாசத்திரம் துறைமுகத்தில் இருந்து 44 படகுகளும், மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் இருந்து 34 படகுகளும் என மொத்தம் 78 விசைப்படகுகள் மட்டுமே கடலுக்கு மீன்பிடிக்க சென்று உள்ளன.

இது குறித்து மீனவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் தாஜூதீன் கூறியதாவது:-

கஜா புயலில் முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு கடந்த 15 தினங்களுக்கு முன்பு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த தொகைக்கு பழைய படகை கூட வாங்கி கடலுக்கு செல்ல முடியாது. சேதமடைந்த படகுகளை மட்டும் மராமத்து செய்து தடைக்காலம் முடிந்த முதல் நாளில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 78 படகுகள் மட்டுமே கடலுக்கு சென்றுள்ளன. மீனவர்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்ப குறைந்தபட்சம் நிவாரண தொகையாக மேலும் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். எனவே நிவாரண தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்