ஊத்துக்கோட்டை அருகே தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற 2 பெண்கள் சாவு

ஊத்துக்கோட்டை அருகே தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்ற 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2019-06-15 22:45 GMT

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பள்ளகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). கணவரை இழந்தவர். இவரது மகன் மதன் (19). இவர் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 2–ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 12–ந் தேதி வீட்டில் சமையல் செய்ய லட்சுமி அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது சேலையில் தீப்பிடித்து கொண்டது. தாயை காப்பாற்ற முயன்ற மதனின் உடலிலும் தீப்பிடித்து கொண்டது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தாய், மகனை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

சூளமேனி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (33). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஹேமாவதி (28). இவர் தன்னுடைய வீட்டில் சமையல் செய்யும் போது நிலைதடுமாறி திடீர் என்று அடுப்பில் விழுந்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இது குறித்து ஊத்துக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தார்.

தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமி, ஹேமாவதி ஆகியோர் நேற்று உயிரிழந்தனர். மதன் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் செய்திகள்