நாகர்கோவிலில் பரபரப்பு விடிந்தால் திருமணம்; இரவில் மணமகன் ஓட்டம் போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் விடிந்தால் திருமணம் நடைபெற இருந்த நிலையில் இரவில் மணமகன் ஓட்டம் பிடித்தார்.

Update: 2019-06-16 22:15 GMT
ஆரல்வாய்மொழி,

நாகர்கோவில் அருகே மாதவலாயத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் சென்னையில் உள்ள நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து இரு வீட்டாரும் பேசி நிச்சயம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் திருமண வேலைகளில் தட புடலாக ஈடுபட்டனர். திருமணத்தையொட்டி மணமக்கள் வீட்டார் அழைப்பிதழை அச்சிட்டு உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வழங்கினர். நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று திருமணம் நடைபெற இருந்தது. இதையொட்டி மணமக்கள் வீட்டில் உறவினர்கள் குவிந்ததால் உற்சாகம் களை கட்டியது. மணமகனும் சென்னையில் இருந்து 2 நாட்களுக்கு முன்பே ஊருக்கு வந்து விட்டார்.

நண்பரை அழைக்க...

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணமகனும், அவருடைய நண்பர்களும் உற்சாகமாக பேசிக்கொண்டிருந்தனர். இரவு வெகுநேரமாக மணமகன் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரவு 10 மணியளவில் மணமகன் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வருவதாகவும், அவரை அழைத்து வரச் செல்வதாகவும் கூறி வீட்டில் இருந்து நண்பரின் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றார்.

நண்பரை அழைக்க சென்ற மணமகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை நண்பர்கள் உதவியுடன் பல இடங்களில் தேடினர். ஆனாலும், மணமகன் பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.

இதனால் உற்சாகத்தில் களைகட்டிய மணமகன் வீடு சிறிது நேரத்தில் களையிழந்து காணப்பட்டது. அங்கிருந்தவர்கள் பரபரப்புடன் மணமகனை தேடி நாலாபுறமும் சென்றனர்.

சென்னைக்கு...

அதைத்தொடர்ந்து உறவினர்கள் இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி, மாயமான மணமகனை வலைவீசி தேடிவந்தனர். மேலும், மணமகனின் செல்போன் எண்ணை கைப்பற்றி அதன் சிக்னலை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர்.

அப்போது, அவரது செல்போன் உளுந்தூர்பேட்டையை காட்டியது. மேலும், அவர் மோட்டார் சைக்கிளிலேயே மின்னல் வேகத்தில் சென்னையை நோக்கி செல்வதும் தெரியவந்தது. இதை அறிந்த உறவினர்கள் அவரை அழைத்து வர சென்னைக்கு புறப்பட்டனர். மேலும், போலீசாரும் அப்பகுதி உள்ளூர் போலீசார் உதவியுடன் மணமகனை பிடிக்க முயற்சி எடுத்து வருகிறார்கள்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், மணமகனுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும், சென்னையில் அவருடன் வேலை பார்த்த ஒரு பெண்ணின் காதல் வலையில் விழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மணமகனை பிடித்து விசாரித்தால் மட்டுமே இதற்கான காரணம் முழுமையாக தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருமணம் நின்றது

இதற்கிடையே மணமகன் மாயமான தகவல் நாகர்கோவில் பகுதியில் உள்ள மணமகள் வீட்டாருக்கு தெரியவந்தது. மணமகன் மாயமான தகவல் அறிந்து பெண் வீட்டார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதைதொடர்ந்து திருமணம் நிறுத்தப்பட்டது.

விடிந்தால் திருமணம் என்ற நிலையில் இரவு மணமகன் ஓட்டம் பிடித்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்