சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை

திருவாரூர் அருகே சிறையில் இருந்து பரோலில் வந்த ஆயுள்தண்டனை கைதி மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-17 23:30 GMT
நன்னிலம்,

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள விசலூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிமாறன். இவருடைய மகன் சாமிநாதன்(வயது38). இவரது மனைவி சரஸ்வதி(33). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ம் ஆண்டு ஒரு வழக்கில் சாமிதாதனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவ்வப்போது சாமிநாதன் சிறையில் இருந்து பரோலில் தனது சொந்த ஊருக்கு வந்து குடும்பத்தினரை பார்த்து செல்வது வழக்கம். சாமிநாதனின் மனைவி மற்றும் குழந்தைகள் அவரது தந்தை மணிமாறன் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் சாமிநாதன் சகோதரரின் வீட்டின் புதுமனை புகுவிழா நடந்தது. இதில் பங்கேற்க சாமிநாதன் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தார். காரைக்காலில் நடைபெற்ற புதுமனைபுகுவிழாவில் தனது மனைவி சரஸ்வதியுடன் கலந்து கொண்ட சாமிநாதன் விழா முடிந்த உடன் விசலூரில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

தூக்கில் தொங்கினர்

நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் சாமிநாதன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தூங்கினார். நேற்று காலை சாமிநாதனின் மகன்கள் தனது தாய்- தந்தையை காணவில்லை என தாத்தா மணிமாறனிடம் கூறினர். அப்போது வீட்டின் மற்றொரு அறையில் சாமிநாதனும் அவரது மனைவி சரஸ்வதியும் தூக்கில் தொங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கணவன்- மனைவி இருவரையும் மீட்டு திருவாரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

இது குறித்து விசலூர் கிராம நிர்வாக அலுவலர் பிரகாஷ் நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல்களை கைப்பற்றி திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாமிநாதன் ஏன் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை. இது குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்