சென்னை, புறநகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது

சென்னை, புறநகர் பகுதிகளில் வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-18 22:27 GMT
பூந்தமல்லி,

வடபழனி மசூதி தெருவை சேர்ந்தவர் பஷீர் (வயது 31). இவர் பூந்தமல்லியில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் தயார் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மனைவியை ஆரணியில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு பஷீர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வட பழனி போலீசார் விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் வடபழனி 100 அடி சாலையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபரை மடக்கி விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்டவர் எம்.ஜி.ஆர். நகர், அங்காளபரமேஸ்வரி கோவில் 3-வது தெருவை சேர்ந்த மணிகண்டன் என்கிற குண்டுமணி (21) என தெரியவந்தது. மேலும் பகல் நேரத்தில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு செல்பவர்களின் வீடுகளை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் இவர் மீது எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், மறைமலை நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் கொள்ளை வழக்குகள் உள்ளது தெரியவந்தது. தொடர் விசாரணையில் பஷீர் வீட்டில் நகை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 3 பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்