ஆழ்வார்பேட்டையில் துணிகரம் ரூ.8 லட்சம் தங்கம்-வைர நகைகளோடு மசாஜ் அழகி தப்பி ஓட்டம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் மூதாட்டியை ஏமாற்றி ரூ.8 லட்சம் மதிப்புள்ள தங்கம்-வைர நகைகளோடு மசாஜ் அழகி ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.

Update: 2019-06-20 22:45 GMT
சென்னை,

சென்னை ஆழ்வார்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராதா (வயது 60). இவர் கை, கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு பிசியோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 வாரங்களாக சவுமியா என்ற மசாஜ் அழகி தினமும் ராதாவின் வீட்டிற்கு வந்து அவரது கை, கால்களுக்கு மசாஜ் செய்து சிகிச்சை அளித்து வந்தார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா வழக்கம்போல ராதாவுக்கு சிகிச்சை அளித்துவிட்டு சென்றார்.

மசாஜ் செய்யும்போது தான் அணிந்திருக்கும் தங்கம்-வைர நகைகளை ராதா அருகில் உள்ள மேஜையில் கழற்றி வைப்பது வழக்கம். அவ்வாறு கழற்றி வைத்த தங்கம்-வைர நகைகளை திடீரென காணவில்லை. மசாஜ் அழகி சவுமியா அந்த நகைகளை எடுத்துக்கொண்டு சென்றிருக்கலாம் என்று ராதா கருதினார்.

அந்த நகைகளின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும். இதுதொடர்பாக அவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளுடன் தப்பி ஓடிய மசாஜ் அழகி சவுமியாவை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்