திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மும்பை நடன அழகி கற்பழிப்பு நிதிநிறுவன அதிபர் மீது வழக்கு

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மும்பை நடன அழகியை கற்பழித்ததாக நிதிநிறுவன அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2019-06-21 22:00 GMT
பெங்களூரு, 

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி மும்பை நடன அழகியை கற்பழித்ததாக நிதிநிறுவன அதிபர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை நடன அழகி

மும்பையை சேர்ந்தவர் சந்தியா (வயது 25, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் பெங்களூருவில் தங்கி மதுபான விடுதியில் நடனம் ஆடும் அழகியாக இருந்தார். சமீபத்தில் அவர் அந்த வேலையை விட்டு நின்றதோடு மீண்டும் மும்பைக்கு சென்றார். இந்த நிலையில் பெங்களூரு சாந்திநகரில் வசித்து வரும் நிதிநிறுவன அதிபர் சுரேஷ் ஜெயின் (50), சந்தியாவின் செல்போன் எண்ணை அவர் பணி செய்த மதுபான விடுதி நிர்வாகத்திடம் இருந்து பெற்று அவரிடம் போன் செய்து பேசினார்.

அப்போது பெங்களூரு வந்தால் தங்கும் இடம் வழங்கி நல்ல வேலை பெற்று தருவதாக உறுதி அளித்தார். இதை நம்பிய சந்தியா மீண்டும் பெங்களூரு வந்தார். இதையடுத்து ஒங்கசந்திராவில் உள்ள வீட்டில் சந்தியாவை, சுரேஷ் ஜெயின் தங்க வைத்ததோடு, மீண்டும் அவரை மதுபான விடுதியில் நடனம் ஆட வைத்தார். அத்துடன் தினமும் சந்தியாவை வீட்டில் இருந்து மதுபான விடுதிக்கு அழைத்து செல்வது, அங்கிருந்து மீண்டும் வீட்டுக்கு அழைத்து வருவதை சுரேஷ் ஜெயின் மேற்கொண்டு வந்தார்.

கற்பழிப்பு

இந்த வேளையில் இரவு நேரங்களில் குடிபோதையில் சுரேஷ் ஜெயின், திருமணம் செய்வதாக கூறி சந்தியாவுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. மேலும் சுரேஷ் ஜெயின் மதுபான விடுதிகளில் நடனமாடும் பெண்களை ஏமாற்றி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. இதுபற்றி சந்தியா அறிந்தார்.

இதற்கிடையே, சுரேஷ் ஜெயினின் தொடர் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்ட சந்தியா சம்பவம் குறித்து விவேக் நகர் போலீசில் புகார் செய்தார். ஆனால் சம்பவம் நடந்த இடம் பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்குட்பட்ட இடம் என்பதால் அந்த புகார் பொம்மனஹள்ளி போலீசுக்கு மாற்றப்பட்டது. அதன்பேரில், சந்தியாவை ஏமாற்றி சுரேஷ் ஜெயின் கற்பழித்ததாக பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்