கால்நடை முகாமுக்கு வழங்கப்படும் மானியத்தில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் அசோக் சவான் குற்றச்சாட்டு

கால்நடை முகாமுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் செய்வதாக அசோக் சவான் குற்றம் சாட்டினார்.

Update: 2019-06-21 23:00 GMT
மும்பை, 

கால்நடை முகாமுக்கு வழங்கப்பட்ட மானியத்தில் பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் செய்வதாக அசோக் சவான் குற்றம் சாட்டினார்.

கால்நடை முகாம்

மராட்டியத்தில் பல்வேறு பகுதிகளில் தற்போது வறட்சி உச்சத்தை எட்டியுள்ளது. தலைவிரித்தாடும் வறட்சியில் இருந்து கால்நடைகளை காப்பதற்காகவும், அவற்றிற்கு தண்ணீர் மற்றும் தீவனம் வழங்குவதற்காகவும் அரசு சார்பில் கால்நடை முகாம்கள் வறட்சி பாதித்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த முகாம்களின் மூலம் பெருமளவு ஊழல் நடந்திருப் பதாக காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறிய தாவது:-

தவறான கணக்கு

மாநிலத்தில் நிலவும் வறட்சியின் மோசமான சூழ்நிலையிலும் பா.ஜனதா, சிவசேனா கட்சி தொண்டர்கள் கால்நடை முகாம்களுக்கு வழங்கப்படும் மானியத்தை தவறான கணக்கை காட்டி கொள்ளையடித்து வருகின்றனர். இப்படிப்பட்ட தவறில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

பீட் மாவட்ட கலெக்டர் சமீபத்தில் அங்குள்ள கால்நடை முகாமில் நடத்திய ஆய்வின்போது, அங்கு தீவனத்துக்காக மானியம் ஒதுக்கப்படும் அளவை விட கால்நடைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை கண்டறிந்தார். அங்கு 16 ஆயிரம் கால்நடைகள் உள்ளதாக கூறி நாள் ஒன்றுக்கு ரூ.7 முதல் ரூ.14 லட்சம் வரை பா.ஜனதா, சிவசேனா தொண்டர்கள் ஊழல் செய்து உள்ளனர்.

பீட் மாவட்டத்தை போன்று மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வரும் கால்நடை முகாம்களிலும் தணிக்கை நடத்தப்படவேண்டும். இதன்மூலம் இது எவ்வளவு பெரிய ஊழல் என்பது வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அசோக் சவான் கூறினார்.

மேலும் செய்திகள்