இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம்: குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை பரபரப்பு தகவல்கள்

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக குமரி வாலிபரிடம் 2-வது நாளாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் புதிதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

Update: 2019-06-22 22:15 GMT
கன்னியாகுமரி,

கடந்த ஏப்ரல் மாதம் 21-ந்தேதி இலங்கையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை பிரார்த்தனை நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது, திடீரென கிறிஸ்தவ ஆலயம் உள்ளிட்ட சில இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது.

உலகையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து நடைபெற்ற விசாரணையில் ஐ.எஸ். அமைப்பினர் இலங்கையில் உள்ள உள்ளூர் அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இந்த துயர சம்பவத்தை நிகழ்த்தியது தெரியவந்தது.

தமிழக வாலிபர்களுக்கு...

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஜாக்ரான் ஹாசிமுடன் தமிழகத்திலும், கேரள மாநிலத்திலும் உள்ள சில வாலிபர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

தமிழகத்தில் தொடர்பில் இருக்கும் வாலிபர்கள் குறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் கோவையை சேர்ந்த முகமது அசாருதீன், ஷேக் இதயத்துல்லா ஆகிய 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. மேலும், அவர்களின் வீடுகளில் நடத்திய விசாரணையில் தகவல் பரிமாற்றங்கள் குறித்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதைதொடர்ந்து 2 பேரையும் கைது செய்தனர்.

குமரி வாலிபர்

முகமது அசாருதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் துருவி, துருவி நடத்திய விசாரணையில், அவருக்கும், கன்னியாகுமரி பூங்குளத்துவிளை பகுதியை சேர்ந்த இம்ரான்கான் (வயது 32) என்ற வாலிபருக்கும், நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து முகாமிட்ட அவர்கள் ரகசியமாக இ்ம்ரான்கானை கண்காணித்து வந்தனர். மேலும், அவர் யார், யாரை எல்லாம் சந்திக்கிறார், அவரது செல்போன் எண்களையும் கண்காணித்து விசாரணை நடத்தினர். அப்போது, அதிகாரிகளுக்கு இ்ம்ரான்கானின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பிற்பகல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இம்ரான்கானை பிடிக்க முடிவு செய்தனர். கன்னியாகுமரி ரெயில் நிலையம் அருகே உள்ள லெஸ்ஸி கடையில் இ்ம்ரான்கான் அமர்ந்திருப்பதை கண்டனர்.

செல்போன் எண் முடக்கம்

உடனே, அதிரடியாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரை பிடித்து, அவர் தங்கி இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். பின்னர், அவரை உடனடியாக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்துக்கு அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு நேற்று 2-வது நாளாக அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். மேலும், அவரது பேஸ்புக், செல்போன் எண்களை ஆய்வு செய்தபோது, அதில் அடிக்கடி முகமது அசாருதீனிடம் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் இம்ரான்கானின் செல்போன் எண், பேஸ்புக் போன்றவற்றை முடக்கியுள்ளனர். இ்ம்ரான்கானுக்கு திருமணம் முடிந்து மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். ேமலும், இம்ரான்கானின் நெருங்கிய நண்பர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து, அவர்களுடைய நடவடிக்கைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். 

மேலும் செய்திகள்