நாய் குறுக்கே வந்ததால் விபத்து, மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் பலி

பெரியகுளம் அருகே நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-22 22:30 GMT
பெரியகுளம், 

கேரள மாநிலம், கோட்டயத்தை சேர்ந்தவர் நாசர். அவருடைய மகன் முகமதுஆரிப் (வயது 21). இவர் கேரளாவில் கல்லூரி ஒன்றில் அனிமேஷன் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கல்லூரி விடுமுறை என்பதால் தனது நண்பர்கள் 10 பேருடன் தனித்தனியாக மோட்டார் சைக்கிள்களில் கொடைக் கானலுக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தார்.

அப்போது பெரியகுளத்தை அடுத்த காமாட்சிபுரம் பகுதியில் உள்ள தோட்டக்கலை கல்லூரி அருகே செல்லும்போது முகமதுஆரிப் சென்ற மோட்டார் சைக்கிள் முன்பு நாய் ஒன்று குறுக்கே சென்றுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் உள்ள மரத்தில் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த முகமது ஆரிபை நண்பர்கள் மீட்டு சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்