அத்திவரதர் விழா காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் ஆய்வு

அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கலெக்டர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2019-06-22 23:33 GMT
காஞ்சீபுரம்,

புகழ் பெற்ற காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் எழுந்தருளி ஜூலை 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அத்திவரதர் விழாவையொட்டி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அத்திவரதரை தரிசிப்பதற்கான வசதிகள், கோவிலுக்கு வெளியே நவீன கழிப்பிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று காலை கோவிலுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார்.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி அத்திவரதரை தரிசிக்க செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகள் குறித்தும் கலெக்டர் பொன்னையா விரிவாக ஆய்வு நடத்தினார். மேலும், காஞ்சீபுரம் நகரில், சாலை வசதிகள் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அப்போது கலெக்டருடன் காஞ்சீபுரம் சப்-கலெக்டர் சரவணன், கோவில் செயல் அலுவலர் என்.தியாகராஜன், காஞ்சீபுரம் தாசில்தார் ஏ.தங்கராஜ், காஞ்சீபுரம் நகராட்சி ஆணையர் மகேந்திரன், நகர் நல அலுவலர் முத்து, சின்ன காஞ்சீபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்சண்முகம் ஆகியோர் உடன் இருந்தனர்.பின்னர் கலெக்டர் பொன்னையா காஞ்சீபுரம் பஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு, சுகாதார வசதிகள், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டார்.

மேலும் செய்திகள்