பாப்பிரெட்டிப்பட்டி அருகே மகனுக்கு வி‌‌ஷம் கொடுத்து பெண் தற்கொலை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே, மகனுக்கு வி‌‌ஷம் கொடுத்து விட்டு, பெண் வி‌‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-23 22:15 GMT
பொம்மிடி,

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நடூரைச் சேர்ந்தவர் சுரே‌‌ஷ் (வயது 35), லாரி டிரைவர். இவரது மனைவி அஸ்வினி (30). இவர்களுக்கு இந்திரகுமார் (7) என்ற மகனும், ஹரிணி (5) என்ற மகளும் உள்ளனர். இந்திரகுமார் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டில் இருந்த தங்கத்தோடு, மோதிரம் உள்ளிட்ட அரை பவுன் நகை திருடு போனது. இதுகுறித்து அஸ்வினியிடம், சுரே‌‌ஷ் அவரது தாய் சின்னபொண்ணு (50) ஆகிய இருவரும் கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

நேற்று முன்தினம் சுரே‌‌ஷ், அவரது தாய் இருவரும் அஸ்வினியிடம் மீண்டும் நகை குறித்து கேட்டுள்ளனர். இதில் மனமுடைந்த அஸ்வினி நேற்று காலை 9 மணிக்கு தனது மகனுக்கு பூச்சிக்கொல்லி மருந்தை கொடுத்துவிட்டு அவரும் குடித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த இருவரையும் அக்கம், பக்கத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அஸ்வினி இறந்தார். இந்திரகுமார் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்