வேப்பூர் அருகே கிணற்றில் மூழ்கி மாணவர் சாவு; நண்பர்களுடன் குளித்த போது சோகம்

வேப்பூர் அருகே நண்பர்களுடன் குளித்த போது கிணற்றில் மூழ்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-23 22:30 GMT

வேப்பூர்,

வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நரேந்திரன் (வயது 15). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது நண்பர்களுடன் கிராமத்தின் அருகே விவசாயி ஒருவருக்கு சொந்தமான கிணற்றில் குளித்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நரேந்திரன் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், நடந்த சம்பவம் குறித்து நரேந்திரனின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் விரைந்து சென்று கிணற்றுக்குள் இறங்கி தேடினர். இருப்பினும் நரேந்திரனை கிடைக்கவில்லை. இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தேடினர்.

ஆனால் நரேந்திரன் கிடைக்கில்லை. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மின்மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வற்றவைத்தனர். தொடர்ந்து கிணற்றில் இருந்து பிணமாக நரேந்திரனை மீட்டனர். அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர்.

இது குறித்த தகவலின் பேரில் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த பள்ளி மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாணவர் சாவு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்