தூத்துக்குடியில் மாயமான மீனவரை தேடும் பணி தீவிரம் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை

தூத்துக்குடி கடலில் மாயமான சங்குகுளி மீனவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி நேற்று விசைப்படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.

Update: 2019-06-25 22:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் ஜோசப் சேகர். இவருடைய மகன் சந்தீஸ்டன் (வயது 23). இவர் திரேஸ்புரத்தில் இருந்து நேற்று முன்தினம் காலையில் 8 பேருடன் சங்கு குளிக்க நாட்டுப்படகில் சென்றார். அவரும், உடன் சென்றிருந்த சக மீனவர்களும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கடல்மைல் தொலைவில் சங்கு குளித்து கொண்டு இருந்தனர்.

சந்தீஸ்டன் கடலுக்குள் மூழ்கி சங்கு குளித்துக் கொண்டு இருந்தபோது, அந்த வழியாக வந்த விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கியதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சந்தீஸ்டன் மாயமானார். இதனால் பதற்றமான சூழல் உருவானது. தொடர்ந்து விசைப்படகுகளை வழிமறித்து நாட்டுப்படகு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில் நாட்டுப்படகு மீனவர்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மீனவர் சந்தீஸ்டன் கதி என்ன? என்பது தெரியாததால், நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 650 படகுகள் திரேஸ்புரம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

அதேநேரத்தில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்வதற்கு தடை விதித்து மீன்வளத்துறை உதவி இயக்குனர் வயோலா உத்தரவிட்டார். அதன்பேரில் 245 விசைப்படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

நடுக்கடலில் மாயமான மீனவர் சந்தீஸ்டனை தேடும் பணியில் 15 நாட்டுப்படகுகள், 3 விசைப்படகுகள் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். ஆனால், நேற்று மாலை வரை சந்தீஸ்டனை மீட்க முடியவில்லை. தொடர்ந்து தேடும் பணி நடந்து வருகிறது. அதே நேரத்தில் இருதரப்பு மீனவர்கள் இடையேயான சமாதான பேச்சுவார்த்தையும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

மேலும் செய்திகள்