9 ஆண்டுகளாக காதலித்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுப்பு, கொலை மிரட்டல் - காதலன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு
9 ஆண்டுகளாக காதலித்து விட்டு திருமணம் செய்ய மறுத்ததுடன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பெண் கொடுத்த புகாரின் பேரில் காதலன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே வாசுதேவமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கிருபா(வயது 24). தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில் கலைவாணனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதை அறிந்த கிருபா, கலைவாணன் வீட்டுக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.
அப்போது கலைவாணன், தன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மறுத்து விட்டதுடன் அவரது அக்கா நதியா, அவரது கணவர் செந்தில் ஆகியோருடன் சேர்ந்து கொண்டு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மன்னார்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கிருபா புகார் கூறியிருந்தார்.
இந்த புகாரின் பேரில் மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கலைவாணன், நதியா, செந்தில் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.