அத்திவரதர் விழா காஞ்சீபுரம் வட்டத்திற்கு 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை

அத்திவரதர் விழா தொடங்கும் நாளான வருகிற 1-ந் தேதி காஞ்சீபுரம் வட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-06-28 20:57 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் விழா வருகிற 1-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். இதையொட்டி விழா தொடங்கும் நாளான வருகிற 1-ந் தேதி (திங்கட்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் காஞ்சீபுரம் வட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு (தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல்) உள்ளூர் விடுமுறை வழங்கப்படும்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் விழா நடை பெறும் மாதத்திலோ அல்லது அடுத்த மாதத்திலோ ஒரு சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்