கன்னியாகுமரியில் கடல் சீற்றம் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கன்னியாகுமரியில் நேற்று கடல் சீற்றமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர்.

Update: 2019-06-30 23:15 GMT
கன்னியாகுமரி,

புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் அதிகாலையில் சூரிய உதயத்தை பார்த்து ரசித்து விட்டு முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்வார்கள்.

பின்னர், கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகில் மற்றொரு பாறையில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்து ரசித்து வருவது வழக்கம்.

இந்தநிலையில் நேற்று அதிகாலையும் சூரிய உதயத்தை காண கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து சூரிய உதயத்தை பார்த்து ரசித்தனர். ஆனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இதனால் எழுந்த ராட்சத அலை கரையில் உள்ள பாறைகள் மீது மோதி சிதறியது. கடலில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இதை கண்டு அச்சமடைந்தனர். இதையடுத்து சுற்றுலா போலீசார் அங்கு விரைந்து சென்று கடலில் குளித்து கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை உடனடியாக வெளியேறும்படி எச்சரித்தனர். மேலும், கடலில் குளிக்க தடை விதித்தனர்.

விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ரசிப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகுத்துறை பகுதியில் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வழக்கம்போல், காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டது. ஆனால், கடல் சீற்றம் காரணமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடைபெறவில்லை.

மேலும் செய்திகள்