தேன் எடுக்க சென்ற போது பரிதாபம், பாறையில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி

சுருளி அருவி மலைப்பகுதியில் தேன் எடுக்க சென்ற வாலிபர் பாறையில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-30 22:30 GMT
உத்தமபாளையம்,

கடமலைக்குண்டு கரட்டுபட்டி பகுதியை சேர்ந்த பரமன்(வயது 22), கருப்பன் (28) மற்றும் 2 பெண்கள் உள்பட 5 பேர் தேன் எடுப்பதற்காக கடமலைக்குண்டு பகுதியில் இருந்து வருசநாடு வழியாக சுருளி வனப்பகுதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் கடந்த 4 நாட்களாக தங்கி பல்வேறு இடங்களில் தேன் எடுத்தனர்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுருளிஅருவி மேல் பகுதியில் உயரமான பாறைகளின் இடுக்குகளில் தேன் எடுப்பதற்காக பரமன் கயிறு மூலம் பாறையின் மேலே ஏறினார்.

அப்போது அவர் எதிர்பாராத விதமாக கை தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வனத்துறையினர் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த பரமனின் உடலை கைப்பற்றி வனப்பகுதியில் இருந்து டோலிகட்டி தூக்கி வந்தனர்.

பின்னர் சுருளி அருவியில் தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்