டி.என்.பாளையம் வனச்சரகத்தில் புலி, சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரிப்பு

டி.என்.பாளையம் வனச்சரகத்தில் புலி, சிறுத்தைகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2019-07-01 23:00 GMT
டி.என்.பாளையம், 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தலமலை, தாளவாடி, ஜீர்கள்ளி, கேர்மாளம், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர் ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் புலி, சிறுத்தை, செந்நாய், கழுதைப்புலி, யானை, மான் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கி நடந்து வருகிறது.

இந்த பணியில் வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் டி.என்.பாளையம் வனச்சரகத்தில் வன ஊழியர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதிவாகி இருந்து சிறுத்தை, புலி, மான், செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகளின் கால் தடங்களை பார்வையிட்டனர். மேலும் வனப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் ஏராளமான புலிகள் மற்றும் சிறுத்தைகளின் படம் பதிவாகி இருந்தது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘டி.என்.பாளையம் வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இதில் வனவிலங்குகளின் கால்தடம், எச்சம் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்பட்டு வருகிறது. தற்போது டி.என்.பாளையம் வனச்சரகத்தில் புலிகள் மற்றும் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளன’ என்றனர்.

மேலும் செய்திகள்