மதுரவாயலில் பெண் தற்கொலை போலீசுக்கு தெரியாமல் உடலை திண்டிவனம் கொண்டு சென்ற கணவர்

மதுரவாயலில் குடும்பத்தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்டார். போலீசுக்கு தெரியாமல் அடக்கம் செய்ய திண்டிவனம் கொண்டு சென்ற உடலை போலீசார் மீட்டு, அவரது கணவரிடம் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2019-07-02 22:15 GMT
பூந்தமல்லி,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). சென்னை மதுரவாயல், நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி சென்டிரிங் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி முனீஸ்வரி என்கிற முனியம்மாள் (23). திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆகிறது.

மது குடிக்கும் பழக்கம் உடைய மணிகண்டன் நேற்று முன்தினம் குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து முனியம்மாள் கேட்டபோது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் முனியம்மாளை அடித்து விட்டு வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னல் வழியாக பார்த்தபோது முனியம்மாள் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று முனியம்மாளை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் முனியம்மாள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு மணிகண்டன் தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் போலீசாருக்கு தெரியாமல் உடலை சொந்த ஊருக்கு எடுத்து வருமாறு கூறினர். இதையடுத்து உடலை திண்டிவனம் எடுத்துச் சென்றுவிட்டார். இதற்கிடையே முனியம்மாள் தற்கொலை செய்த தகவல் மதுரவாயல் போலீசாருக்கு தெரிய வந்தது.

இதையடுத்து திண்டிவனம் சென்ற போலீசார் உடலை மீட்டு சென்னை கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் மணிகண்டன் உடலை எடுத்துச்சென்றது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

திருமணமாகி 2½ ஆண்டுகள் ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து மணிகண்டனிடம் மதுரவாயல் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்