சாவில் மர்மம் இருப்பதாக கூறி, தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் - ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

சாவில் மர்மம் இருப்பதாக கூறி தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-07-03 22:30 GMT
ஈரோடு,

பெருந்துறை சென்னிமலை ரோடு காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாபு (வயது 29). கட்டிட தொழிலாளி. இவருக்கும், சிவகிரி அருகே உள்ள தாண்டாம்பாளையத்தை சேர்ந்த மகாலிங்கத்தின் மகள் பிரபாவுக்கும் (22) கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் பாபு தனது மனைவி மற்றும் குழந்தையுடன் தாண்டாம்பாளையத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு அருகில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.

நேற்று முன்தினம் காலை திடீரென பாபு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாபுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே பாபு இறந்த தகவல் அறிந்ததும் அவருடைய உறவினர்கள் நேற்று முன்தினம் மாலை, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள் ‘பாபு தற்கொலை செய்யவில்லை. அவரை யாரோ அடித்து கொலை செய்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை பாபுவின் உறவினர்கள் ஏராளமானோர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் பாபுவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பெருந்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜாகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கூறும்போது, பாபுவை அடித்துக்கொலை செய்துள்ளனர். எனவே காரணமானவர்களை கைது செய்தால் தான் நாங்கள் பாபுவின் உடலை வாங்கிச்செல்வோம்’ என்றனர்.

அதற்கு போலீசார், பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்னர் தான் பாபு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து தெரியவரும். அப்படி அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

அதை ஏற்க மறுத்த பாபுவின் உறவினர்கள், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்தால் மட்டுமே உடலை வாங்கி செல்வோம் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் பாபுவின் உடலை ஆம்புலன்சில் ஏற்றி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதனால் பாபுவின் உறவினர்கள் வேறுவழியின்றி அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்