கடவூர் ஒன்றியத்தில் லாட்டரி சீட்டு விற்பனை: கைதானவர்களை விடுவிக்ககோரி போலீஸ் நிலையம் முற்றுகை

கடவூர் ஒன்றியத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக கைதானவர்களை விடுவிக்ககோரி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, மறியல் நடந்ததால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-07-04 22:45 GMT
தரகம்பட்டி,

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக சிந்தாமணிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது கரிச்சிப்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 55). குருணிகுளத்துப்பட்டியை சேர்ந்த சேட் (65) ஆகியோர் லாட்டரி சீட்டு விற்றதாக அவர்களை போலீசார் கைது செய்தனர். இது குறித்து தகவல் அறிந்த பழனிச்சாமி மற்றும் சேட்வின் உறவினர்கள் கைதானவர்களை உடனடியாக விடுவிக்ககோரி சிந்தாமணிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விட்டது என கூறினர். இதனை ஏற்றுக்கொள்ளதாக அவர்கள் திருச்சி-பாளையம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார், தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் மற்றும் போலீசார் வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பழனிச்சாமி மற்றும் சேட்டுவை சொந்த ஜாமீனில் விடுவித்தனர். இதையடுத்து மறியல் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்