திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் கைது

திருப்பூரில் சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-07-06 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலன்(வயது 62). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அப்பகுதியை சேர்ந்த 1–ம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி தனது தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளாள். மற்ற சிறுமிகள் சென்று விட அந்த சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளாள். இதை கவனித்த ஜெயபாலன் நைசாக அந்த சிறுமியிடம் பேச்சுக்கொடுத்து அவருடைய வீட்டுக்கு அழைத்துச்சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதை அங்கிருந்த பெண் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். மேலும் சிறுமி தனக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி அழுதாள். உடனடியாக இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் ஜெயபாலன், சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் ஜெயபாலனை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். விளையாட சென்ற சிறுமியிடம் முதியவர் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்