செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் அதிகநேரம் பேசியதை கணவர் கண்டித்ததால் மனம் உடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-07-06 23:00 GMT

பூந்தமல்லி,

பூந்தமல்லி சென்னீர்குப்பம், எஸ்.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 29). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகாலட்சுமி(26). இவர்களுக்கு 1½ வயதில் மகதி என்ற பெண் குழந்தை உள்ளது.

மகாலட்சுமி, வீட்டில் இருக்கும்போது அதிகநேரம் செல்போனில் பேசி வந்ததாகவும், இதனை கார்த்திக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன்–மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. மகாலட்சுமியின் பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.

எனினும் இதில் மனம் உடைந்த மகாலட்சுமி, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டுக்கு சென்ற மகாலட்சுமியின் பெற்றோர், மீண்டும் வந்து பார்த்தபோது குழந்தை அழும் சத்தம்கேட்டது.

கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மகாலட்சுமிக்கு திருமணமாகி 5 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்