இலுப்பூரில் விளையாட்டு வினையானது: பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் தாய்-மகன் படுகாயம்

இலுப்பூரில் பள்ளி மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் தாய், மகன் படுகாயமடைந்தனர். விளையாட்டாக செய்த காரியம் வினையானது.

Update: 2019-07-07 23:15 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி நீலா(வயது 26). இவர்களின் மகன் அஜீத்(3). நேற்று முன்தினம் மாலை நீலா தனது வீட்டின் எதிரே வசிக்கும் பெண்ணுடன், திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் அருகே சிறுவன் அஜீத் விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது, எதிர்வீட்டு பெண்ணின் 15 வயது மகன் (10-ம்வகுப்பு படித்து வருகிறான்) தனது வீட்டில் இருந்த நாட்டுதுப்பாக்கியை எடுத்து வந்து, ‘ஓடி விளையாடாதே, சேட்டை செய்தால் துப்பாக்கியால் சுட்டு விடுவேன்’ என்று சிறுவன் அஜீத்தை விளையாட்டாக மிரட்டியுள்ளான். அந்தநேரம் மாணவனின் விரல் துப்பாக்கி விசையை அழுத்தவே, அதில் இருந்து துப்பாக்கி குண்டுகள் வெளியேறி, சிறுவனின் கண் மற்றும் காது மடலை உரசியபடி சென்று, நீலாவின் கால் விரல்களில் பாய்ந்தது.

இதில் தாய்-மகன் இருவரும் படுகாயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிகாமணி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில், பள்ளி மாணவனின் தந்தை, லைசென்சு பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருந்ததும், நாடாளுமன்ற தேர்தலுக்காக இலுப்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த துப்பாக்கியை கடந்த 2-ந்தேதி தான் அவர் வீட்டுக்கு வாங்கி சென்றதும் தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதில் குண்டுகளை போட்டு சோதித்து விட்டு, அதை அவர் வீட்டில் மறைவான இடத்தில் வைத்துள்ளார்.

இந்தநிலையில் பள்ளி மாணவன் அந்த துப்பாக்கியை விளையாட்டாக எடுத்து சுட்டதில், தாயும், மகனும் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. இதைதொடர்ந்து போலீசார் பள்ளிமாணவன் மற்றும் அவருடைய தந்தை மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் மாணவனின் தந்தையை போலீசார் கைது செய்ததுடன், துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்