பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

பிற்படுத்தப்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரி கூறினார்.

Update: 2019-07-07 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் (பி.சி, எம்.பி.சி, டி.என்.சி ) மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த கல்வியாண்டில் உதவித்தொகை பெற, முதுகலை, பாலிடெக்னிக், தொழிற்படிப்பு போன்ற பிற படிப்புகளுக்கு பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

கல்விஉதவித்தொகை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்ப படிவங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று வருகிற அக்டோபர் மாதம் 15-ந்தேதிக்குள் பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். அதில் மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தவறாது குறிப்பிட வேண்டும்.

விண்ணப்பிக்கலாம்

மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். www.tn.gov.in\\bcmbcdept என்ற இணைய தள முகவரியிலும் இத்திட்டங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளது.

எனவே, மாணவ-மாணவிகள் கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பித்து பயன்பெறலாம் என கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்