பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலா

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவத்தை முன்னிட்டு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2019-07-09 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற பிரம்மபுரீஸ்வரர் உடனுறை ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி கோவிலில் ஆனி திருமஞ்சன உற்சவம் நடந்தது. இதனை முன்னிட்டு பக்தர்களால் வெள்ளி ரிஷப வாகனம் செய்யப்பட்டு நேற்று முன்தினம் காலை, அதன் வெள்ளோட்டம் நடந்தது. அதனை தொடர்ந்து விநாயகர் பூஜை, புண்ணியா வாஜனம் நடைபெற்றபின், பஞ்சமூர்த்திகள் உள்பட அனைத்து மூர்த்திகளுக்கும் 16 வகையான வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகமும், வெள்ளி வாகனத்திற்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவ மூர்த்திகளான ஆனந்தவள்ளி சமேத சந்திரசேகரர் சுவாமி எழுந்தருளினார்.

வீதிஉலா

பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதையடுத்து சுவாமி வீதிஉலா நடந்தது. பூஜைகளை திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர். விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் மணி, வர்த்தக பிரமுகர்கள் ராஜா மகேஸ்வரன், பழனியப்பன், விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் அரிமா ராஜேந்திரன், கோவில் முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன், பூக்கடை சரவணன் மற்றும் பிரதோஷ வழிபாட்டுக்குழுவினர், சிவத்தொண்டர்கள் திரளான பேர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்துடன் இணைந்து தர்மபரிபாலன சங்கத்தினர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்