பெண்ணாடம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு

பெண்ணாடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த டிரைவர் உயிரிழந்தார்.

Update: 2019-07-09 22:45 GMT
பெண்ணாடம், 

பெண்ணாடம் அருகே உள்ள வெண்கரும்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 52). இவரது மனைவி முத்துலட்சுமி(45). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஆதிமூலம் அரியலூர் மாவட்டம் தளவாயில் உள்ள தனியார் சிமெண்டு தொழிற்சாலையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வேலை முடிந்ததும், ஆதிமூலம் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.பெண்ணாடம் அருகே பெரியகொசப்பள்ளம் என்ற இடத்தில் திட்டக்குடி-விருத்தாசலம் சாலையில் சென்ற போது, அங்கு சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தின் அருகில் இருந்த பேரலில் ஆதிமூலம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக உரசியதாக தெரிகிறது.

இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த ஆதிமூலம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணாடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, பலியான ஆதிமூலம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துலட்சுமி பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்