ஓடும் டிராக்டரில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து உடல் நசுங்கி பலி விளாத்திகுளம் அருகே பரிதாபம்

விளாத்திகுளம் அருகே ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-07-10 22:45 GMT
விளாத்திகுளம், 

விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி பாண்டீசுவரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் நேற்று மதியம் நாகலாபுரத்தில் மரங்களை வெட்டி, டிராக்டரில் ஏற்றினார். பின்னர் அவர், அந்த டிராக்டரில் ஏறி விளாத்திகுளத்தில் உள்ள மர அறுவை ஆலைக்கு புறப்பட்டு சென்றார்.

விளாத்திகுளம் அருகே புதூர் குளக்கட்டாகுறிச்சியை சேர்ந்த குருசாமி மகன் பெரியசாமி என்பவர் டிராக்டரை ஓட்டிச் சென்றார். டிராக்டர் டிரைவர் இருக்கையின் அருகில் செல்வராஜ் அமர்ந்து இருந்தார்.


விளாத்திகுளம் அருகே ஏ.குமாரபுரம் அருகில் சென்றபோது, செல்வராஜ் எதிர்பாராதவிதமாக ஓடும் டிராக்டரில் இருந்து தவறி விழுந்தார். அப்போது டிராக்டரின் டயர் செல்வராஜின் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரலிங்கபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் பலியான செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்