சிறுபாக்கம் அருகே, தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சிறுபாக்கம் அருகே தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-10 23:00 GMT
சிறுபாக்கம்,

சிறுபாக்கம் அருகே உள்ள கீழ்ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 32), விவசாயி. இவரது மனைவி சத்யா(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சரவணன் தனது குடும்பத்தினருடன் வீட்டின் முன்புறமுள்ள வராண்டாவில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்மநபர்கள் தூங்கிக் கொண்டிருந்த சத்யாவின் கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகையை பறித்தனர். இதில் திடுக்கிட்டு எழுந்த சத்யா திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர்.

இதை பார்த்த மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். பறிபோன நகையின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சத்யா சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்