திருச்சி கோரையாற்றில் மணல் கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 9 பேர் கைது

திருச்சி கோரையாற்றில் இருந்து மணல் கடத்த முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2019-07-11 22:15 GMT
திருச்சி,

திருச்சி கோரையாற்றில் இருந்து நள்ளிரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் மணிகண்டன் தலைமையில் எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிக்சன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு பஞ்சப்பூரை அடுத்த கோரையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு ஒரு கும்பல் பொக்லைன் எந்திரம் மூலம் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி லாரிகளில் கடத்த முயன்றது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓட முயன்றது. ஆனால் போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை எடமலைப்பட்டிபுதூர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர்கள், கே.கள்ளிக்குடியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான பாலசுப்பிரமணியன், மேலபஞ்சப்பூரை சேர்ந்த பெரியசாமி, கிருஷ்ணமூர்த்தி, லெட்சுமணன், கீழப்பஞ்சப்பூரை சேர்ந்த கோவிந்தராஜ், மூக்கன், பொக்லைன் டிரைவர் கன்னியப்பன், ராஜ்குமார், சசிகுமார் ஆகிய 9 பேர் என்பது தெரியவந்தது.

இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம், கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.1¼ லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். திருச்சியில் மணல் கடத்த முயன்ற 9 பேர் கும்பலை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்