நாசரேத் பகுதியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு

நாசரேத் பகுதியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-11 21:30 GMT
நாசரேத், 

நாசரேத் பகுதியில் 2 வீடுகளில் கதவை உடைத்து நகை-பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியை

நாசரேத் ஜெயபாண்டியன் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மனைவி சத்தியவதி (வயது 73). ஓய்வுபெற்ற ஆசிரியை. மனோகரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சத்தியவதி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெர்மனி நாட்டில் உள்ள தன்னுடைய மகனின் வீட்டுக்கு சென்றார். எனவே நாசரேத்தில் உள்ள அவரது வீட்டை அப்பகுதியைச் சேர்ந்த பேச்சியம்மாள் பராமரித்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலையில் பேச்சியம்மாள், சத்தியவதியின் வீட்டுக்கு சென்றபோது, அங்கு வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து சத்தியவதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது சத்தியவதி தனது வீட்டில் உள்ள பீரோவில் 2½ பவுன் நகை, ரூ.7 ஆயிரத்தை வைத்து இருந்ததாக தெரிவித்தார். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து அங்கிருந்த நகை-பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம்

நாசரேத் அருகே கச்சனாவிளை கீழ தெருவைச் சேர்ந்தவர் கலாதரன் (61). இவர் மும்பையில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அங்குள்ள அவரது வீட்டின் பின்பக்க கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. பீரோவில் இருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.9 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. கலாதரனின் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அவரது வீட்டில் புகுந்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகார்களின்பேரில், நாசரேத் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடுகளில் புகுந்து நகை, பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்