பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 5 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை ஒருவருக்கு போலீசார் வலைவீச்சு

பாலியல் தொந்தரவு கொடுத்ததால் 5 குழந்தைகளின் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-07-11 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாவி. இவரது மகன் சங்கர். இவர் 5 குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணை தகாத உறவுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினார்.

இதையடுத்து அந்த பெண்ணின் பெற்றோர் சங்கரை கண்டித்தனர். இந்நிலையில் அந்த பெண் தனது 5 குழந்தைகளையும் அழைத்து கொண்டு அவரது தாய் வீட்டிற்கு வந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் மீண்டும் அந்த பெண்ணிற்கு சங்கர் தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த 5 குழந்தைகளின் தாய் கடந்த 10-ந்தேதி கீழவெளியூரில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் தோகைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

பின்னர் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சங்கரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்